Saturday 5 May 2012

Alibaba 40 theives Episode 2

தலைவரின் எந்த வார்த்தைகளையும் காதில் வாங்காத ஷேர்கான், பானுமதியை அழைத்து செல்வதிலேயே குறியாக இருப்பான், பானுமதியை வேலி இல்லாத ரோஜா என்றும் ஏளனம் செய்வான்.

தலைவர் உடனே சொல்வார் வேலியில்லாவிட்டாலும் ரோஜாவைப் பாதுகாக்க முட்கள் இருப்பது உனக்குத் தெரியாதா? இதோ பார் முள்படுத்தும் பாட்டை, என்ற கூறிவிட்டு ஷேர்கானைத் தள்ளிவிடுவார். கோபம் கொண்ட ஷேர்கானின் ஆட்கள் சண்டை போடு வருவார்கள்.

அவர்களோடு கத்திக் சண்டை போடும் போது வாள் வீசும் லாவகத்தைப பார்த்து வியப்பதா... இல்லை மின்லைப் போல பாயும்  வேகத்தை வியப்பதா... இல்லை ஓரிடம் நில்லாமல் துள்ளிக் குதித்துக் ஓடும் சுறுசுறுப்பை ரசிப்பதா... படம் பார்க்கும் ரசிகனுக்கும் ஒரே குழப்பமாகிவிடும். அப்படி ஒரு அருமையான சண்டைக்காட்சி அது. அத்தனை சண்டையிலும் முகம் மாறாமல் சிரித்துக் கொண்டே தலைவர் சண்டை போடும் அழகை ரசிக்காதவனோ... பாராட்டாதவனோ... மனிதன் இல்லை.

ஷேர்கான் நன்றாக உதை வாங்கிக் கொண்டு ஒருவழியாக தப்பித்து ஒடுவான். அவன் பின்னே தலைவர் துரத்திக் கொண்டே ஒடி வருவார். ஷேர்கான் கீழே விழுந்து விடுவான். வேண்டும் என்றே அவன் முகத்தருகே வாளின் முனையை வைத்து ஆட்டுவார். ஷேர்கான் உயிர் பயத்தில் தவிப்பான்.

அபோதும் சிரிப்புடன்தான் தலைவரின் முகம் இருக்கும். ஷேர்கானைப் பார்த்து, இருப்பவன் பயந்து சாவான் இல்லாதவன் துணிந்து சாவான். நான் சாகும் வரை உங்கள் ஈனச் செயலுக்கு தடை இருந்து கொண்டேதான் இருக்கும்.. என்று சொல்விட்டு விரலை ஆட்டி எச்சரிக்கை செய்வார். இபோது முகம் மாறுவதை பார்க்கவேண்டுமே.. சிவந்தமுகம் மேலும் சிவப்பது நன்றாகத் தெரியும். ஷேர்கான் பயந்தே போவான். ஷேர்கானின் கத்தியை அவன் மீது எறிந்து விட்டு இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு மகாராஜா போல நிற்பார். அதைக்காணவே கண் கோடி வேண்டும்.

அப்போது ஊர் பெரியவர் ஒருவர் தலைவரை வாழ்த்துவார். காசீம்கானின் ஆட்கள் செய்யும் அட்டகாசத்தையும் அநியாயத்தையும் தட்டிக் கேட்கும் குணத்தையும் பாராட்டுவார்.

அதற்குத் தலைவர் நன்றி சொல்லுவார். அப்போது பணிவுடன் கையை நீட்டிக்குனிந்து நன்றி பிரதிபலிக்கும் முகத்தோடு சலாம் சொல்லுவார். அந்த அடக்கமும் பணிவும் பார்க்கப் பார்க்கத் திகட்டாத ஒன்று.

அதன் பிறகு தான் அருகில் இருக்கும் பானுமதி இருப்பதே அவருக்கு நினைவுக்கு வரும்.

திரும்பி பானுமதியைப் பார்ப்பார். அழகான புன்னகையோடு பானுமதியைப் பார்க்கும் போது அவருடைய அழகான முகத்தில் எந்தவித விரசமும் இல்லாத கண்ணியமான பார்வையாக இருக்கும், அழகை ரசிக்கும் ஒரு ரசிகனின் பார்வையாக மட்டுமே அது இருக்கும்.

அழகான ஒரு பெண்ணைப் பார்த்ததும் பல்லிளித்து விட்டுப்போகும் பார்வை அல்ல அது பொதுவாக இப்படி பார்வையில் நடிக்கும் போது கத்தி மீது நடக்கும் நிலைதான் மனதிலிருப்பதை கண்கள் பிரதிபலித்து விடும். அலிபாபாவின் மனதில் அந்தப் பேரழகியைக் கண்டும் எந்தவிதமான வேண்டாத நினைவுகளும் இல்லை என்பதே காட்சி. அதை தலைவர் நடிப்பில் வெளிப்படுத்தும் விதமோ அற்புதமான ஒன்று என்பதே ரசிகனின் முடிவு. நடிகப்பேரரசர் எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யாராலும் இந்த மிக மென்மையான காட்சிக்கு இத்தனை அழகாக உயிரூட்டி நடிக்க முடியாது என்பதே உண்மை.

பானுமதியைப் பார்த்தது அழகை ரசிக்கும் நிலைதான் என்பதை அடுத்த விநாடியில் வெளிப்படுத்துவார். அவரோடு எதுவும் பேசாமல் தன் வழியே ஓடுவார். போகும் போது கையிலிருக்கும் பழத்தை அங்கே வழியில் உட்கார்ந்திருக்கும் பையனிடம் தூக்கிப்போடுவார். எந்தக் கவலையுமில்லாத மனிதனாகத் தன் வழியே போய்க் கொண்டிருப்பார்.

பானுமதியும் சாரங்கபாணியும் ஓடிவந்து தங்கள் நன்றியை அவருக்குத் தெரிவிப்பார்கள். உடனே தலைவர் சொல்லுவார் என கடமையைத் தானே செய்தேன்...

இந்த வசனம் தலைவருக்காகவே உருவாக்கப் பட்டது என்று சொன்னால் அது மிகையல்ல ஏறக்குறைய அவருடைய எல்லாப் படங்களிலும் இந்த வசனம் வந்தே தீரும். ஏனென்றால் தலைவர் ஏற்ற பாத்திரங்கள் எல்லாமே கடமை வீரனாக வருபவைதான். இந்த அற்புதமான வசனத்தை முதன் முதலில் அவருக்கு எழுதிய அந்த வசனகர்த்தா பெருமகனுக்கு எங்களுடைய வணக்கங்கள்...

பானுமதி அவரைப் புகழ் என்று இழுக்கும் போதும், வார்த்தைகளைத் தேட வேண்டாம். என்னைப் புகழ்ந்ததாகவே நினைத்துக் கொள்ளுகிறேன். என்று சொல்லிவிட்டு படியேறி பாலத்தின் மீது நடப்பார். மீண்டும் பானுமதியும் சாரங்கப்பாணியும் விடாமல் பின்னால் ஒடிவருவார்கள்.. வேறு வழியில்லாமல் நிற்பார்.

எனக்குப் அதிகமாகப் பேசி பழக்கமில்லை வருகிறேன்... என்று போக முற்படுகிறபோது பானுமதி தனக்கு தலைவரின் வீட்டில் அடைக்கலம் தர முடியுமா என்று கேட்கிறார். உடனே தலைவர்.

எனக்குப் பெண்களைக் கண்டாலே பிடிக்காது... அதிலும் ஆண்களை அடக்கி ஆளும் இந்தக் கண்களைத் கண்டாலே எனக்கு ரொம்ப் பயம்... நான் வரட்டுமா? என்று கூறிவிட்டு வேகமாக பாலத்தின் மறுபுற படிக்கட்டில் இறங்கிப் போய் வீட்டுக்கதவைத் தட்டுவார். கதவை திறந்து ஒரு பெண் வருவாள். அவளை அணைத்துக் கொண்டு தலைவர் உள்ளே போய்விடுவார்.

பானுமதி தலைவர் மீது கடும் கோபம் கொண்டு ஏசிப் பேசுவார். வீட்டிலிருந்து வெளியே வந்தவள் தலைவரின் மனைவியாக இருக்கவேண்டும் என்று அவர் திட்டிக் கொண்டிருக்கும் போது பாலத்தின் அடியில் ஷேர்கான் தன் ஆட்களோடு வருவான். சாரங்கபாணி பதறிய படி பானுமதியை இழுத்துக் கொண்டு தலைவரின் வீட்டுக் கதவைத் தட்டுவார். தலைவர் மீது கோபத்தில் இருக்கும் பானுமதி வர மறுத்து முரண்டு பிடிப்பார். ஆனால் தலைவர் கதவைத் திறந்ததும் சாரங்கபாணி பானுமதியை உள்ளே தள்ளுவார்.

தன்மீது வேகமாக விழும் பானுமதியைத் தலைவர் பிடிப்பார். பானுமதி கையை உதறுவார். தலைவர் எதுவும் புரியாமல் தவிப்பும் குழப்பமுமாக இருவரையும் பார்ப்பார்.

இந்தக் காட்சிகளில் இரண்டு இடங்களில் சாரங்கபாணி தலைவரைப் பற்றி பேசும் வசனங்கள் மகிவும் வியப்பானவை பின்னாளில் உண்மையாகிப் போன நிஜங்கள். தலைவர் ஒரு தெய்வப் பிறவி என்பதை நமக்கு உணர்த்தும் உண்மைகள்.

ஷேர்கான் உதை வாங்கிக் கீழே விழுந்து வீதியில் கிடக்கும் போது சாரங்கபாணி சொல்வார். கீரிக்கு பாம்புண்ணா... அந்த பாம்புக்கு இந்த கருடணையும் படைச்சிருக்கார் கடவுள்... என்று தலைவரைக் காட்டுவார். தலைவருக்குப் பகைவரே கிடையாது... அப்படி அவரை பகையாக நினைத்தவர்கள் தாங்களே அழிந்து போவார்கள்... அவரை மனம் நோகடித்தவர்கள் இன்றும் என்ன வேதனையை அனுபவிக்கிறார்கள் என்பதை நம் கண் முன்னே, அனுதினமும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

அடுத்தாக பானுமதி வலியப்போய் பேசி அடைக்கலம் கேட்டும் போது மறுத்து விட்டுப்போகும் தலைவரைப் பார்த்து, துணியாவில் பார்க்க முடியாத ஒரு தனியான ஆள்... என்பார். இதன் பொருள் உலகத்தில் பார்க்க முடியாத ஒரு தனியான ஆள்... உண்மைதானே? இந்த உலகத்திலேயே யாராலும் அவரைப் போல இருக்க முடியாத உத்தமகுணங்கள் கொண்ட அற்புதமான மனிதர் தலைவர் மட்டும் தானே? இந்த வசனம் அவருடைய திரைப்படத்தின் பெரிய வெற்றிகளுக்குப் பின்னால் எழுதப்பட்டாதா? இல்லை அவர் முதல்வரான பிறகு எழுதப்பட்டாதா? இரண்டும் இல்லையே...

தலைவர் மனிதருள் மாணிக்கம் என்பதை அன்றே இறைவன் மற்றவர் மூலம் எழுத வைத்து விட்டான் என்பதே உண்மை... காற்றின் வேகத்தை, பொங்கிவரும் நதிப்பிரவாகத்தை கொழுந்து விட்டு எரியும் பெரு நெருப்பின் சூட்டை, விரிந்து கிடக்கும் ஆகாயத்தின் அழகை... மனிதக் கை கொண்டு மறைக்க முடியுமா - இல்லை மனித மமதை கொண்டு அழிக்க முடியுமா? இதைப் போலவே தான் தலைவரின் பெருமைகளும் இறைவனால் படைக்கப்பட்ட நிஜங்கள்...

தொடரும்.